manitha vanakkamm - kamal hassan kavidahigal

Leave a Comment
தாயே, என் தாயே! 
நான் உரித்த தோலே அறுத்த கொடியே
 குடித்த முதல் முலையே
என் மனையாளின் மானசீகச் சக்களத்தி, சரண்.

தகப்பா, ஓ தகப்பா! 
நீ, என்றோ உதறிய மை படர்ந்தது கவிதைகளாய் இன்று
புரியாத வரியிருப்பின் கேள்! 
பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.

தமயா, ஓ தமயா! 
என் தகப்பனின் சாயல் நீ 
அச்சகம் தான் ஒன்றிங்கே 
அர்த்தங்கள் வெவ்வேறு.

தமக்காய், ஓ தமக்காய்!
 தோழி, தொலைந்தே போனாயே 
துணை தேடிப் போனாயோ?

மனைவி, ஓ காதலி!
 நீ தாண்டாப் படியெல்லாம்
 நான் தாண்டக் குமைந்திடுவாய்
 சாத்திரத்தின் சூட்சமங்கள் புரியும் வரை

மகனே, ஓ மகனே! 
என் விந்திட்ட விதையே
 செடியே, மரமே, காடே
 மறு பிறப்பே மரண செளகர்யமே, வாழ்!

மகளே, ஓ மகளே!
 நீயும் என் காதலியே எனதம்மை போல 
எனைப் பிரிந்தும் நீயின்பம் காண்பாயா
இல்லை காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?

நண்பா, ஓ நண்பா!
 நீ செய்த நட்பெல்லாம்
 நான் செய்த அன்பின் பலன்
 இவ்விடமும் அவ்விதமே.

பகைவா, ஓ பகைவா! 
உன் ஆடையெனும் அகந்தையுடன் எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.
 நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே உனதம்மணத்தின் விளம்பரங்கள்.
 மதமென்றும், குலமென்றும் நீ வைத்த துணிக் கடைகள் நிர்மூலமாகி விடும் 
நிர்வாணமே தங்கும்.

வாசகா, ஓ வாசகா!
 என் சமகால சகவாசி,வாசி!
 புரிந்தால் புன்னகை செய்.
 புதிரென்றால் புருவம் உயர்த்து.
 பிதற்றல் எனத் தோன்றின் பிழையும் திருத்து.
 எனது கவி உனதும்தான்.
 ஆம், நாளை உன் வரியில் நான் தெரிவேன்.


0 comments:

Post a Comment